“ஜனநாயக நெறிமுறைகளைக் கடைப்பிடிப்ப தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்மாதிரி யாக திகழ்கிறது. கிளைச் செயலாளர் முதல் அகில இந்திய பொதுச்செயலாளர் வரை அனைத்து நிர்வாகிகளும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நியமனம் என்பதற்கே இடமில்லை. இலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுனவின் மகத்தான வெற்றியை வரவேற்கிறோம். இங்குள்ள சில தமிழ் தேசியவாதிகள் இதனை தமிழ் மக்களுக்கு ஆபத்து என சித்தரிக்க முயல்கிறார்கள். அவர்களுக்கு இலங்கையில் இடதுசாரிகள் ஆட்சியைப் பிடித்ததில் பொறாமையே தவிர வேறொன்றுமில்லை. புதிய பாதை வகுப்போம்
புதிய பாதை வகுப்போம்
நம்மைப் பொறுத்தவரை, மார்க்சிஸ்ட் கட்சியின் கண்ணூர் மாநாட்டில் எடுத்த முடிவுகளின்படி மூன்று முக்கிய முழக்கங்களுடன் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தோம் - பாஜக ஆட்சியை அகற்றுவது, நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது, மதச்சார்பற்ற அரசை அமைப்பது. ஆனால் நாம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை. அதைப் பரிசீலித்து, இலக்குகளை அடைய புதிய பாதை வகுப்போம். இன்று பாஜக அரசு ஆர்எஸ்எஸ் கொள்கைகளை அமல்படுத்துவதில் தீவிரமாக உள்ளது. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா இதற்கு எடுத்துக்காட்டு. சிறுபான்மையினருக்கு எதிராகவும், மாநில உரிமைகளுக்கு எதிராகவும் எதேச்சதிகாரமாக செயல்படுகிறது.
வேளாண் கொள்கைகளில் ஒன்றிய அரசின் சதி
விவசாயிகளின் பிரம்மாண்டமான போராட்டத்தால் மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன. மோடியை தோற்கடிக்க முடியாது என்ற பிம்பத்தை அந்தப் போராட்டம் உடைத்தெறிந்தது. ஆனால் இப்போது கொல்லைப்புற வழியாக, சட்டம் என்று இல்லாமல் கொள்கை என்ற பெயரில் வேளாண் விற்பனை தொடர்பான தேசியக் கொள்கையை நவம்பர் 25 அன்று வெளியிட்டுள்ளனர்.
வேளாண் விற்பனையில், கொள்முதலில் தனியாரை அனுமதிப்பது என்பதே அந்தக் கொள்கையின் நோக்கம். இது தனியார்மயமாக்கலின் மற்றொரு வடிவம். குறைந்தபட்ச ஆதார விலை குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை. மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்ட வேளாண் விற்பனையில், பாதிக்கப்படும் விவசாயிகளிடமோ, விவசாய சங்கங்களிடமோ, மாநில அரசாங்கத்திடமோ கருத்து கேட்காமல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விவசாய நெருக்கடியும் நில இழப்பும்
வேளாண் துறை இன்று கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது. விவசாயிகளுக்கு நிலத்தின் மீதான உரிமைக்கு உத்தரவாதமே இல்லாத நிலை உருவாகியுள்ளது. விவசாய நிலங்களின் பரப்பளவு ஆண்டுக்கு சராசரியாக ஒரு லட்சம் ஏக்கர் வீதம் வேறு பணிகளுக்கு மாற்றப்பட்டு குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசு நிலவங்கி உருவாக்கி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி வைத்துள்ளது.
சிறு, குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் விவசாயத்தை விட்டு வெளியேற்றப்படும் கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மனைவி, மக்களை விட்டு புலம்பெயர்தல் தவிர்க்க முடியாததாகிவிட்டது. விவசாயம் இயந்திரமயமாகி விட்டது. அதிக நேர வேலை, குறைந்த கூலியில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் விவசாயப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் உள்ளூர் தொழிலாளர்கள் வேலை யின்மைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடரும் போராட்டங்கள்
இந்தக் கொள்கை அறிக்கையை எதிர்த்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் டிசம்பர் 23 அன்று நாடு தழுவிய பிரமாண்டமான கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன. அவற்றை நாம் வெற்றிகரமாக நடத்த வேண்டும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதப்படுத்தக்கூடிய வகையில் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.
தொழிலாளர் நலனில் சமரசம் இல்லை
தமிழகத்தில் சாம்சங் தொழிற்சாலையில் சங்கம் அமைக்கவே பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. வெளிநாட்டு நிறுவனங்கள் வருவதில் எதிர்ப்பில்லை. ஆனால் தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். தொழிலாளர்கள், விவசாயிகள் நலன்களை பாதிக்கும் பிரச்சனைகளில் சமரசமற்ற போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம்.